தினவு

வேள்வித் தீ,  எம்.வி.வெங்கட்ராம் எழுதிய இந்நாவல் , சௌராஷ்டிரா மக்களின் வாழ்க்கை பின்னணி,நெசவு தொழிலின் நலிவு குறித்து பேசியிருக்கிறது. இந்நாவலின் நாயகன் கண்ணன் நெசவு தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர உழைக்கிறவன். பணமே வாழ்க்கையெனக் கொண்ட உறவுகள், பணத்திற்காக அல்லாடும் மனைவி கௌசலை, பணம் உதவி செய்ய முன்வரும் ஹேமாவுடன் நெருங்கி  மனைவியிடமிருந்து விலகும் கண்ணன்,...என நெசவுத்தொழில் சிக்கலுடன் உறவுச் சிக்கலையும் இந்நாவல் பேசியிருக்கிறது.

நெசவு தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் குதிக்கிறார்கள். இரு தொழிலாளர்கள் பேசிக் கொள்ளும்படியாக ஓரிடம் வருகிறது. ' இப்படி எல்லாரும் பொறுப்பில்லாமப் பேசிதான், காளை மாட்டுக்குத் தினவு கொடுத்து சண்டித்தனம் செய்யுது. சாட்டையைச் சொடுக்கி, ரெண்டு வச்சாத்தான், காளை மாட்டுக்கு ரோசம் பிறக்கும்!'

இவ்விடத்தில் காளை மாடு என்பது  ஒரு கட்சியின் தேர்தல் சின்னம் என்பதைக் கொண்டு இந்நாவலின் காலத்தை நாம் கணித்துக்கொள்ளலாம். சரி, அது என்னதாம் தினவு ?

வயிறு என்கிற சிறுகதையில் ஹரன் பிரசன்னா இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ' மெல்ல எடுப்பான அவளது பல் மறைய அவள் உடலின் தினவு தெரிய ஆரம்பித்தது'. அப்படியென்றால் தினவு என்பது உடலுடன் தொடர்புடைய ஒரு சொல் என்பதாக ஒரு புரிதலுக்கு வரலாம். 

உயிர்த்தலம் என்றொரு சிறுகதை. ஆபிதீன் எழுதியது. அதில் இப்படியாக  ஒரு வரி ' பசி போன்றதொரு தினவு ' இங்கு தினவு என்பது அரிப்பைக் குறிக்கிறது . நெஞ்சுக்கொம்பு என்கிற கதையில் ம.நவீன் இதே பொருளில் இச்சொல்லை  பயன்படுத்தியிருக்கிறார். 

இச்சொல் குறித்து அகராதியில் தேடுகையில் திவான் பஹதூர் ச.பவானந்தம் பிள்ளை தொகுத்த தற்கால தமிழ்ச்சொல் அகராதி , தினவு என்பதற்கு  சொறி என்கிற  ஒற்றைப் பொருளை மட்டுமே தந்துள்ளது.  மேலும் சில அகராதிகள் அரிப்பு, அதீத உணர்ச்சி என்பதாக பொருள் தந்துள்ளன.

'சொறிந்து தீர்வுறு தினவினர்' என்கிறது கம்பராமாயணம். 

வாசந்தி ,  இந்தியா டுடே  இதழில் தினவு என்றொரு சிறுகதை எழுதினார். அக்கதை அன்றைக்கு பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.  இக்கதை அன்றைய உத்திரபிரதேசம் மாநிலத்தின்  முதலமைச்சராக இருந்த மாயாவதியை முக்கிய பாத்திரமாக வைத்து பேசியிருந்தது.  ' அவர் குருட்டு அதிர்ஷ்டத்தில் பதவிக்கு வந்தவரென்றும் மேலும்.....' என்பதாக கதை  விரிய, இக்கதை அவரது புகழுக்கு களங்கத்தை விளைவிக்கிறதென எதிர்ப்புகள் கிளம்ப, வேறு வழியில்லாமல் எழுத்தாளரும் இதழாசிரியரும் அதற்காக வருத்தம் தெரிவித்தார்கள். 

' என்னைக் கொன்று விட்டார்கள்' என்கிற சிறுகதையில் கோ.புண்ணியவான் ' ஆண் தினவு நொறுங்கிவிட்டது ' என்பதாக ஒரு வரியைப் பயன்படுத்துகிறார். 

க்ரியா தற்கால தமிழ் அகராதி  தினவு என்கிற சொல்லுக்கு மூன்று விதமான பொருளைத் தந்துள்ளன. 1. சொறி , அரிப்பு 2. தீவிர உந்துதல் 3. திமிர் .

வேள்வித்தீ நாவலில் இடம்பெற்ற தினவு என்கிற சொல்லுக்கு திமிர் எனப் பொருள் கொள்ளலாமே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்