ஆடித் திங்களும் ஆடித் தமிழும்
ஆடி மாதம் பிறந்துவிட்டது. எதையும் ஆட்டிப் பார்ப்பதற்கென்றே வருவதால் அதற்கு ஆடி என்று பெயர் என்பதாக வேடிக்கையாக கிராமத்தில் சொல்வர். ஏழை மக்களைப் பயங்காட்டும் மாதம் இது. ஆடி காத்துக்கு அம்மியும் பறக்கும் என்பது சொலவம். அம்மி மட்டுமல்ல, ஆடி மாதத்தில் கொடுக்கும் வாக்குறுதியும்கூட காற்றில் பறந்துவிடுவதுண்டு. இதிலிருந்து பிறந்ததே ஆடிவாக்கு. “அவன் கொடுத்தது சத்திய வாக்கல்ல, ஆடிவாக்கு.” என்பர் கிராமத்தவர்கள். ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தை குடும்பத்தை அலைக்கழிக்கும் என்று இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும்கூட மக்கள் நம்பிவருகிறார்கள். ஆடியிலே பிறந்தவன் என்கிற சொல் புழக்கத்தில் உண்டு. ஆடி வந்தால் கூடவே ஜவுளிக்கடை தள்ளுபடி விளம்பரமும் வந்துவிடுகிறது. ஆடி வறட்சியான மாதம் என்பதால் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை சற்றே குறையும். சில பொருள்கள் ஆடி மாதத்தில்தான் விலை கட்டுக்குள் அடங்காமல் எகிறும். ஊர்க்கோவில், நாட்டார் தெய்வங்கள், குலதெய்வ வழிபாடு ஆடியில் நடப்பதால் இம்மாதத்தில் ஊர்ச் சந்தைகளில் ஆட்டுக்கிடாக்கள் குதிரை விலையில் விற்கும். சாமானியன், விவசாயிகளின் வாழ்வில் ஆடி முக்கிய மா...