வியஞ்சனம்

'என் ராஜா' அபிராமி துர்காதாஸ் எழுதிய  சிறுகதை . தாய் இட்டலி, வடை சுட்டுத் தருவதை மகன் தலையில் சுமந்துபோய் விற்று வருகிறான். அவனின் ஆசிரியர் மாணவர்களை அழைத்துகொண்டு சுற்றுலா செல்கிறார்.  தாயிடம் நாலணா காசு வாங்கிக்கொண்டு அவனும் செல்கிறான். அங்கு பலரும் பலதை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.  அவன் அக்காசை பத்திரமாக வைத்திருக்கிறான் ' இந்த நாலாணாவைக் கொண்டு தேங்காயும், பொட்டுக்கடலையும்  வாங்கினால் நாளைக்கு இட்டலிக்கு வியஞ்சனம்  ஆகுமே ' என்று.

அது என்னதாம் வியஞ்சனம்...?

 உ.வே.சா எழுதிய 'என் சரித்திரம்' சுய சரிதத்தில்  இச்சொல்  இடம் பெற்றிருக்கிறது.  'ஆகாரத்திற்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதையும் சாப்பிடுவதுண்டு'.

'மனோமணியம் ' நாடகத்தில் வரும் தமிழ்த்தாய் வாழ்த்து  நீராரும் கடலுடுத்த.... பாடலின்  நீட்சியில்

"தக்கவழி விரிந்து இலகும்
சங்கத்தார் சிறுபலகை
மிக்க நலம் சிறந்த உன்றன்
மெய்ச்சரித வியஞ்சனமே"

இவ்விடத்தில் வியஞ்சனம் என்பது குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம் எனப் பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ சர்வஞானோத்தரம்  பக்தி பாடலில் இச்சொல் நிறைய இடங்களில் வருகிறது.  திருப்புவனம் மன்னன் வீரபாண்டியன் கல்வெட்டில் இச்சொல் இடம் பெற்றுள்ளது.  இதிலிருந்து வியஞ்சனம் என்பது ஒரு வடமொழி சொல் என்கிற தெளிவிற்கு வந்துவிடலாம்.

காரைக்குடி பகுதிகளில் இதே சொல் சற்று திரிந்து வெஞ்சனம் என்றும் வெஞ்சினம் என்றும்  வட்டார வழக்காகியிருகிறது. நத்தை வெஞ்சனம், பருப்பு வெஞ்சனம், மோர் வெஞ்சனம்... என்று இன்றைக்கும் சொல்வதைக் கேட்கலாம். இதைக் கொண்டு பார்க்கையில் வியஞ்சனம் என்பது சில இடங்களில் குழம்பாகவும், சில இடங்களில் கூட்டுப் பொரியலாகவும், சில இடங்களில் கறி வகைகளையும் குறிப்பதாக பொருள் கொள்ள முடிகிறது.

இராஜம் கிருஷ்ணன் எழுதிய 'பாதையில் பதிந்த அடிகள்' நாவலில் இப்படியாக ஓரிடம்.

' உன் மாமா மக தானே உன் பொஞ்சாதி , அவளைப் போய் ஏன் அடிச்சே?'

'காலாம கஞ்சி கொண்டாந்தா, தொட்டுக்க ஒரு வியஞ்சனம், உப்பு மொளவா வச்சி அரச்சிக் கொண்டாந்தா என்னவாம்? '

இதிலிருந்து ஒரு முடிவிற்கு வரலாம். பல பொருட்கள் சேர்ந்த குழம்பு அல்லது கூட்டுப் பொரியல் செய்கையில் எப்பெயரில் அது அழைக்கப்படுகிறதோ அதுவே வியஞ்சனம். உதாரணமாக,  என் அம்மா சமையலில் எனக்கு பிடித்தது வெண்டைக்காய் வியஞ்சனம்.  உங்களுக்கு தக்காளி வியஞ்சனமாகக் கூட இருக்கலாம்.
     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்