முடங்கல்


இந்தியாவில் புல்வாமா தீவிரவாத தாக்குதல், அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீதான பால்காட் தாக்குதல்,... இரு நாடுகளுக்குமிடையில் அசாதாரண சூழ்நிலை நிலவும் இத்தருணத்தில் , மார்ச் 22 அன்று ,பாகிஸ்தான் கொண்டாடிய
தேசிய தினத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி  வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அவ்வாழ்த்துச் செய்தியை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் , அந்நாட்டு மக்களின் சார்பாக நன்றி தெரிவித்தார்.

இந்திய மக்கள் முன் பாகிஸ்தானை எதிரியாக நிறுத்தல் ,  வாழ்த்துவித்தல் என மோடியின் இரட்டை நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரன்தீப் சுர்ஜெவாலா ' Mr.Modi  should stop writing love letters ' என தன் இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

Letter என்பதற்கு எழுத்து, எழுத்துரு, மடல், விகிதம், தபால், காகிதம், அஞ்சல், தூது, காயிதம், கடுதாசி, ஓலை, நிருபம்,  மடங்கல், முடங்கல் என பலச் சொற்களில் பொருள்கொள்ளப்படுகின்றன. 

எழுதப்படும் கடித வகைகளில் ஒன்று காதல் கடிதம். இந்தியாவில் ' love letter'  என்கிற பதம் சர்ச்சையானது . இதற்கு முன்பு தமிழக மீனவர்கள்  குறித்து முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுத அக்கடிதத்தை ' love letter ' என ஸ்ரீலங்கா வெளியுறவு  துறை அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டது. அந்த வாசகம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. 

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுக்கு எழுதப்பட்ட ஒரு இரகசிய கடிதம் அப்படியாகவே  செய்தியானது.

Love letter  என்பது காதல் கடிதம் என்பதைக் கடந்து 'பெரும் எதிர்ப்பார்ப்பிற்குரிய கடிதம்' எனப் பொருள் கொள்ளலாம். கூட்டணி ஆட்சி அமைக்க , மாநில கட்சிகளிடம் தேசிய கட்சிகள் கோரும் ஆதரவு கடிதங்கள் -  love letters.

கடிதம் என்பதற்கான தமிழ்ச் சொல் 'முடங்கல் '. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, முடங்கல் என்பதற்கு சுருளோலைக் கடிதம் ( roll of palm-leaf used in letter- writing.  முடத்தாழை,  கள்ளி, முள்ளி ( மலை) , மூங்கில் என பல பொருள்களைத் தருகின்றது.

சிலப்பதிகாரத்தில் முடங்கல் இருவேறு இடங்களில்  இடம்பெறுகிறது.  மாதவி கோவலனுக்கு தாழை வெண்ணிற மடலில் love letter  ( காதல் கடிதம்) எழுதுகிறாள். இதைத் திறந்த மடலாகக் கொண்டுபோய் கொடுப்பவள் வசந்தமாலை ( வேனிற்காதை ).
இன்றைக்கு இவ்வகை கடிதம் முகநூல், ட்விட்டர் ,...மடலாக இருக்கிறது.

கோவலன் கண்ணகியுடன் புகார் நகரத்தை விட்டு கிளம்பிய பிறகு மற்றொரு love letter ( அவசர மடல் )  எழுதுகிறாள். இதைக் கோவலனிடம் சேர்க்கிறவன் கோசிகமாணி. இம்மடலை 'மண்ணுடை முடங்கல்' என்கிறார் இளங்கோவடிகள். ( புறஞ்சேரியிறுத்த காதை ). இங்கு மண்ணுடை என்பது மண் பசை . அதாவது சீல் வைக்கப்பட்ட கடிதம் என்று பொருள்.  இன்றைய இணைய உலகில் இது  gmail, messenger மடலாக இருக்கிறது.

முடங்கல் என்கிற சொல்லின் வேர்ச்சொல் முள். முள் - முள்ளுடை - முள்ளுடல் - முடங்கல். அதாவது முள் + உடல் என்பது  முற்கள் உடைய கள்ளி என்று பொருள். இன்றைக்கும் கிராமக் காதலர்கள் பால் வடியும் கள்ளிகளில் காதல் கடிதம் எழுதி வருவதைக் காணலாம்.

முடங்கல் என்பதற்கு  வளைந்தது , சுருண்டது எனப் பொருள். உறையூர்ப் பல்காயனார் இயற்றிய குறுந்தொகை பாடலில் ' முடங்கல் இறைய தூங்கணங்குரீஇ ' என்றொரு வரி உண்டு. அதாவது வளைந்த இறகுகள் உடைய குருவி .

மோடியின் கூற்றுப்படி இந்தியாவின் எதிரி பாகிஸ்தான். அப்படியானால் ரன்தீப் சொன்னதைப் போன்று , எதிரிக்கு love letter எழுதிவிட முடியுமா ?.

ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் இருவரின் குடும்பமும் பரம்பரை எதிரிகள். இருவருக்குள்ளும் காதல் பரிமாற்றம் நிகழும். இவர்களின் பரிமாற்றம் பகை கடந்த  உண்மையான காதல்.

ஓர் எதிரியை அழித்தொழிக்கும் பொருட்டு  எழுதப்படும் காதல் கடிதம்  இலக்கியத்தில்  இடம் பிடித்துள்ளதா?

C.S.LEWIS என்கிற ஆங்கில எழுத்தாளர் THE SCREWTAPE LETTERS என்றொரு நாவல் எழுதினார். ( Letter from a senior to a junior devil)  இதில் ஒரு  அலகை ( பூதம் ) தன் எதிரியைக் காதலிப்பதைப் போல நடித்து கடிதம் மேல் கடிதமெழுதி அவனைத் தன் வழிக்குக் கொண்டு வந்து அவனை வீழ்த்தும். இத்தகைய காதல் கடித வழிக் கொலைகள் இன்றைய புலனம் ( whatsapp) உலகில் நிறைய நடந்தேறுகிறது . இவ்வகை கடிதம் சட்டப்படி குற்றமானது.

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற்புராணத்தில் 'மாணிக்கத்தின் குற்றம்' என 16  வகை குற்றங்களைப் பேசுகிறது. அதிலொன்று திருக்கு. அதாவது பற்றான ஒன்றைக் கொண்டு   சிதைப்பது. 

எதிரிக்கு எழுதப்படும் காதல் கடிதத்திற்கு 
ஆங்கிலத்தில் Screwtape letter என்று பெயர். இதைத் தமிழில் திருக்முடங்கல் அல்லது திருக்குக்கடிதம் எனச் சொல்லலாமே !
     - தீக்கதிர் வண்ணக்கதிர் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்