படிறு

நாடாளுமன்றத் தேர்தலில் பணப்புழக்கத்தைக் காரணம் காட்டி தள்ளி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடத்தப்பட்டு ஆகஸ்ட் 8 அன்று முடிவு வெளியானது. இத்தேர்தலில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிப் பெற்றார். ஆனால் அன்றைய தின மாலை முரசு பத்திரிகை '  அதிமுக கூட்டணி  வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அமோக வெற்றி' என்பதாகத் தலைப்புச் செய்தியுடன் கூடிய செய்தி வெளியிட்டது.  



ஒரு பத்திரிகைக்குத் தலைப்புச் செய்தி இடுவதை ' மகுடமிடல் ' என்கிறார் பாரதியார். சக்கரவர்த்தினி மற்றும் இந்தியா இதழ்களில் ஆங்கிலத் தலைப்பிற்கும் கீழே தமிழில் தலைப்பிடுதலை வழக்கமாகக் கொண்டிருந்த பாரதி, பிறகு  இந்தியா, விஜயா, கர்மயோகி முதலிய இதழ்களில் தமிழில் மட்டுமே தலைப்புச் செய்தி அமைத்தார். 

ஒரு பத்திரிகையின் மகுடமிடல் தவறென்றால், அதை எப்பெயரால் அழைப்பது?

அமெரிக்க அதிபர் ட்ரெம்ப்பின் இணைய பக்கத்தில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்பதாக அமெரிக்க பத்திரிகைகள் மகுடமிட, அதற்கு அதிபர் ட்ரெம்ப் தனது சுட்டுரையில், NBCN, ABC, CBS, CNN செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து அமெரிக்காவிற்கு எதிரான பொய்ச்செய்தியை வெளியிட்டு வருகிறன்றன. இச்செய்தி நிறுவனங்கள் சதி கோட்பாட்டின் படி இயங்குவதாகவும் இந்நிறுவனங்கள் LUEGEN PRESSE என்பதாகவும் குறிப்பிட்டார்.

 LUEGEN -இச்சொல்லை முதலில் பிரயோகித்தவர் Reinhold Anton(1914) என்கிற ஜெர்மனியர். முதல் உலகப்போர் காலத்தில் ஜெர்மனிக்கு எதிராக  செய்தி நிறுவனங்கள் பொய்ச்செய்திகளைத் தொடர்ந்து வெளியிட  அவ்வாறு  அழைத்தார். இச்சொல்லை அடால்ப் ஹிட்லர் யூத, கம்யூனிச ஆதரவு பத்திரிகைகள் மீது பிரயோகித்தார்.

பொய்ச்செய்திகளை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் இன்று DEFAMATORY ( தீங்கான அமைப்பு)என்கிற பெயரால் அழைக்கப்படுகிறது.

தேசியவாதத்தின் பெயரால் பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன என்கிறது பிபிசி.  இதன் சுட்டுரை #BEYONDFAKENEWS.

சர்வதேச பத்திரிகை கூடுகை 2014  ஆம் ஆண்டினை Luegen சொல்லை கருப்பொருளாகக் கொண்டு UN - WORD YEAR எனக் கடைப்பிடித்தது. 

பாரதிதாசன் பத்திரிகையை ' பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே ' என்கிறார்.  இதன்படி பத்திரிகை கற்புடையது.

'பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த ' என்பதாக சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம் , அடக்கலக் காதையில் ஒரு வரி. அதாவது, கற்பில் சிறந்த ஒரு  பெண் மீது பழிச்சொல் விழும்படியாகப் பொய்ச் சொன்னால் சதுக்கப்பூதம்  கயிற்றில் முடிந்து இழுத்துச் சென்று உண்ணும் என்பது செய்தி. 

'படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே யென்றும்
அசையாத உள்ளத்தவர்' என்கிறது 'சொல்லக்கூடாதவை ' என்கிற தலைப்பின் கீழ் ஆசாரக்கோவை. இங்கு படிறு என்பது வஞ்சகத்தால் சொல்லும் பொய்.

'வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்' என்கிறது குறள் .  இங்கு படிறு + ஒழுக்கம் - பொய்யொழுக்கம்

மாலாய் உழலும் அது ஆனால் வீணே படிறு சொல் ஆகா
லோகாயதன் ஆகி  ( திருப்புகழ் ) . இங்கு படிறு - வஞ்சனை

'மூதுரைகொள் வாக்குக்கு அணி படிறு வாயாமை'  என்கிறது செகவீர பாண்டியனார் இயற்றிய அணியதிகாரம்.  இங்கு படிறு - வஞ்சகம்.

பல்வேறு சமயப் படிற்றுரையெல்லாம் ( மணிமேகலை) . படிற்றுரை - பொய்யுரை

ஊராண்மைக் கொத்த படிறுடைத்து ( கலித்தொகை). இங்கு படிறு - தீய ஒழுக்கம்.

'பொக்கங்களே பேசும் பால் ஊறு தேன் வாய் படிறீஇ' என்கிறது திருவாசகம். இங்கு படிறி - பெண்பால் . இதன் ஆண் பதம் படிறன்.

சுப.வீரபாண்டியன் 'திராவிடம் ' குறித்த ஒரு கட்டுரையில் படிறு என்கிற சொல்லிற்குக் கொடுமை எனப் பொருள் தருகிறார்.

படிறு என்றால் பொய் என்கிறது பிங்கல நிகண்டு. 

நவீன தமிழ்ச்சொல் அகராதிகள் படிறு என்பதற்கு  பொய், போலி, வஞ்சகம், சூழ்ச்சி, சதி, சிற்றொழுக்கம் என்பதாகப் பொருள் தருகிறது. 

இதிலிருந்து பொய் அல்லது சதியாக தலைப்பிடும் செய்தியை ' படிறுமிடுதல் ' என்றும் அத்தகையப் பத்திரிகை ' படிறு பத்திரிகை ' எனவும் கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்